ஆன்மசாந்திக்கும் வித்தாகும் அற்புதக் கவிதைகளை அழகாக எழுதி நூலாக்கி இருக்கும்
கவிஞர் ஜீவயோகி ஜெயஸ்வாமிநாதரின்
“ஆகாயநாதம்”
எனும் கவிதை நூல் முழுமையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் மென்மைதோய்ந்த சத்துவப் படைப்பு.
இலக்கியத்தின் நோக்கம் இன்பம் ஊட்டுவது மட்டுமன்று. சக தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும்
வழிகாட்டுதலை வழங்குவதும் படைப்பாளனின் தார்மீகக் கடமை ஆகும். அதனாலே சங்க இலக்கியங்கள்
காதலையும் வீரத்தையும் பாடுவதையே உள்ளடக்கமாகத் தன்வசம் கொண்டிருந்தாலும் அறநெறிப் படுத்துவதையும்
தவறவில்லை. உலக இலக்கியங்களில் அதிகமான அற இலக்கியங்களைக் கொண்டது என்ற நற்சான்றும் தமிழ்
இலக்கியத்திற்கு உண்டு.
இதனைப் புரிந்தே ஜீவயோகி ஜெயஸ்வாமிநாதரும் தனது கவிதைகளில் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில்
எல்லாம் இளைய தலைமுறையை வழிநடத்தும் வண்ணம் அறக்கருத்துகளை இழையோட விடுகிறார். மேலும் சமயம்
கடந்த ஆன்மீக உணர்வுகளையும் இறையுணர்வுகளையும் கவிதை தோறும் கரைந்தோட விடுவதைக்
கண்கூடாய்க் காணமுடிகிறது.
இறையுணர்வுக்கு நாம் கொடுக்கும் உருவங்கள் தான் வேறுவேறு. ஆனால், இறையுணர்வு ஒன்றுதான்
என்பதால் திருக்கீதை, திருவிவிலியம், திருக்குர்ரான் மட்டுமின்றி தேவாரம் திருவாசகம்
திருமந்திரங்களும் கவிதைகளின் ஊடோடி ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இருபத்தியோர் இன்பம் என்ற கவிதையில் திருமந்திரத்தின் மந்திரங்கள் மறைந்தோடுவதை உணராமல்
இருக்க முடியவில்லை. வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சொல்மகளாம் சரஸ்வதி என்னும் கலைவாணி
வேதநாவுக்கு அரசி என்று கேட்டிருப்பீர்கள்.
பூசித் தவள்மொழி போற்றிச் சுவைத்திட
வாசிக் கமலத்தில் வாழும் கலைவாணி
நேசித் தருளும்விண் வீடு.”
என்ற வெண்பாவில் எல்லோரும் தேடும் வீடு பேறு, சொல்லாலே கிடைக்கும் சூட்சுமத்தை அற்புதமாக
இவர் வெளிப்படுத்தியுள்ளார். இவைகளோடு மற்ற கவிதைகளிலும் இலை மறை காயாகவும் கனியாகவும் இருக்கும்
மெய்ஞ்ஞானத் தத்துவங்கள் யாவும் விலை மதிப்பில்லா மாணிக்கங்கள் ஆகும்.
அன்னையின் நிகரில்லாத அன்பு… தந்தையின் ஆத்மார்த்தமான அறிவுரை… ஒரு சொட்டுத் தண்ணீருக்கான
ஏக்கம்… இளைஞருக்கான இலட்சியம்… இயற்கையை நேசிக்கும் இயல்பு என… ஒரு நல்ல நட்பின் புனிதமும்
காலந்தோறும் காப்பாற்றப்பட வேண்டிய உயர்வான ஒன்று என்பதை உணர்ந்து உணர்த்தும் பாவணிபுலவர் வெ
புகழேந்தி தனது உணர்வுகளை, வானத்தை வளைத்துப்போட்ட வானவில்லாய் தனது வரிகளில் பிரதிபலித்துக்
காட்டியுள்ளார்.
அம்மா அப்பாவின் அன்பிற்கு உருகாதவர் உலகில் யாருளர்?
“அன்னை”,
“அப்பா”
கவிதை வரிகளில் நமது நெஞ்சை நெகிழவைக்கிறார்.







Reviews
There are no reviews yet.